வவுனியாவில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு : அரச உத்தியோகத்தர்கள் விடுத்துள்ள கோரிக்கை (PHOTOS)
வவுனியாவில் எரிபொருளை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் அரச உத்தியோகத்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளதுடன், கடமைக்கு உரிய நேரத்தில் சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகுந்த ஏற்பாட்டை செய்து தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன், அத்தியாவசிய தேவைக்கு என குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் வழங்கப்படுகின்ற போதும் அங்கு கடமைக்கு செல்லும் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியாவில் எரிவாயு இன்மையால் பொதுமக்கள் ஏ9 வீதியினை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டமானது இன்று (20) இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக எரிவாயு இன்மையினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை தொடக்கம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிவாயு நிலையத்திலும் அதிகாலை தொடக்கம் எரிவாயுக்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
எனினும் குறித்த எரிவாயு நிலையத்தில் எரிவாயு வழங்கப்படமாட்டது என தெரிவித்த நிலையில், கோபமுற்ற மக்கள் ஏ9 வீதியில் எரிவாயு கொள்கலன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், பொலிஸார் வீதியிலிருந்த எரிவாயு கொள்கலன்களை அகற்றியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதன் போது பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கிடையே கடும் தர்க்க நிலை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் இப் போராட்டம் காரணமாக ஏ9 வீதியின் போக்குவரத்து அரை மணித்தியாலயம் வரை ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பெற்றோல் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த வேளை எரிபொருள் வழங்கும் நடவடிக்கையினை இடையில் நிறுத்தப்பட்டதால் இளைஞர்கள் மக்கள் ஒன்றிணைந்துபிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பதற்ற நிலை நிலவியுள்ளதுடன், தகவலறித்த முள்ளிவளை பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு பகுதி அதிகாரிகள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிஸ் அதிகாரி மற்றும் விலைக்கட்டுப்பாட்டுபிரிவு அதிகாரிகளின் தலையீட்டின் பின்னர் அங்கு காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மலையகம்
இதேவேளை, கடந்த மூன்று நாட்களாக மலையகப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல கிலோமீற்றர் தூரம் பெற்றோல் பெற்றுக்கொள்வதற்காகவும் , டீசல் பெற்றுக்கொள்வதற்காகவும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டுள்ளன.
பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கரவண்டி சாரதிகள், கூலி வாகன ஓட்டுனர்கள்
தங்களது தொழிலில் ஈடுபட முடியாது பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.