விடுதலைப் புலிகளின் தலைவருடன் ஒப்பந்தத்திற்கு தயாரான சந்திரிக்கா: தடுத்து நிறுத்திய ஜேவிபி - நினைவுபடுத்தப்படும் விடயம்
பிரஜா சக்தி என்பது ஜே.வி.பி கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது என தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளரும், யாழ். மாநகரசபை உறுப்பினருமான அ.நிசாந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகாவும் இணைந்து சுனாமி கட்டமைப்பை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தயாரான போது வழக்கு தாக்கல் செய்து ஜேவிபியினர் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வறுமை ஒழிப்பு என்ற போர்வையில் பிரஜா சக்தி என்ற ஒரு திட்டத்தினை ஜேவிபி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அந்தப் பிரஜா சக்தியில் தமது கட்சியின் நேரடி உறுப்பினர்களை அல்லது விசுவாசிகளை ஒவ்வொரு உள்ளூராட்சி மன்ற வட்டாரங்களிலும் நியமித்துள்ளார்கள்.
பிரஜா சக்தி
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் வேறு தேர்தல்களை இலக்காக கொண்டும், கட்சியை வளர்ப்பதை நோக்காகக் கொண்டும் இந்த பிரஜா சக்தி ஆரம்பிக்கப்பட்டது. ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் எண்ணக்கருவிலேயே இந்த பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது. ஆகையால் இந்தப் பிரஜா சக்தி திட்டத்தினை நான் வன்மையாக எதிர்க்கின்றேன்.
பிரஜா சக்தி என்பது இந்த அரசையும் தாண்டி ஒருபடி மேலே வந்துள்ளது. அரசாங்கத்தின் பிரதேச செயலகளின் கீழுள்ள கிராம சேவகர்களே இதுவரை அந்த கிராமத்தின் தேவைகளான வீடு, காணி, உணவுத் தேவை, வறுமை, வாழ்வாதாரம் போன்ற விடயங்களை அரசாங்கத்தின் உதவி மூலம் பெற்றுக் கொடுப்பார்கள். ஆனால் அதை மழுங்கடிக்கும் வகையில் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டுள்ளது.

என்.பி.பி என்பதை தாண்டி ஜேவிபியானது இன்று வடக்கு கிழக்கிலே மையம் கொண்டுள்ளது. ஜேவிபி தமது கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் அடிப்படையிலேயே இந்த பிரஜா சக்தி ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகாவும் இணைந்து ஒரு சுனாமி கட்டமைப்பை உருவாக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தயாரானார்கள்.
இதன்போது இன்று ஆட்சி செய்கின்ற ஜேவிபியினர் அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தனர். அதாவது, அரசாங்கமானது தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புடன் எந்த விதமான உடன்படிக்கையையும் மேற்கொள்ள முடியாது. அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய முடியாது என்று வழக்கு மூலம் சுனாமி கட்டமைப்பை தடுத்தார்கள்.
வடக்கு - கிழக்கில் அனுமதிக்க முடியாது
இன்று நான் கேட்கிறேன், பிரதேச செயலர் தலைமையிலான கட்டமைப்பின் கீழ் கிராம சேவகர்கள் இருக்கின்ற நிலையில், அரச கட்டமைப்புக்கு நிகரான இன்னுமொரு கட்டமைப்பான பிரஜா சக்தியை உருவாக்கி அரசாங்க கட்டமைப்பை மீறியிருக்கின்றார்கள். பிரஜா சக்தியை வடக்கு - கிழக்கில் நாங்கள் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் இது தொடர்பாக ஒரு தெளிவான அறிவிப்பை விடுத்து பிரஜா சக்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உண்மையில் அது பாராட்டத்தக்க விடயம். பிரஜா சக்திக்கு எதிராக மாநகர சபைக்கு உட்பட்ட எனது வட்டாரத்திலிருந்து கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்க உள்ளேன். மேலும் இந்த கையெழுத்துப் போராட்டத்தை ஏனைய பிரதேச சபைகளுக்கும் கொண்டு செல்ல உள்ளேன். இதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
சுயநிர்ணய உரிமை அதாவது, தமிழர்களை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று நாங்கள் கூறி வருகின்றோம். இதற்காக நாங்கள் 75 வருடங்களாக ஆயுத ரீதியிலும், அகிம்சை ரீதியிலும் போராடி வருகின்றோம். இன்று ஆட்சியில் இருக்கும் ஜேவிபி கட்சியினர் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |