அமைச்சர் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யாவிட்டால் அகில இலங்கை ரீதியில் போராட்டம் வெடிக்கும்! சுப்பிரமணியம் எச்சரிக்கை
அமைச்சர் தனது ஆலோசனையை மீள்பரிசீலனை செய்யாமல் இந்திய மீனவர்களை பாஸ் நடைமுறை மூலம் தொழில் செய்வதற்கு அனுமதித்தால் அகில இலங்கை ரீதியில் போராட்டம் வெடிக்கும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வீ.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் சொல்லப்பட்ட ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களும், பலதரப்பட்ட மீனவ அமைப்புகளும் கோஷங்களை எழுப்பிக்கொண்டு இருக்கின்ற இந்த வேளையிலே இந்தியாவில் 60 நாட்கள் இனப்பெருக்க நாளாகக் கருதி அங்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவிலே உள்ள மீனவர்கள் சுருக்கு வலைத் தொழிலைச் செய்வதற்கான அனுமதியைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள்.
அந்த தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையிலே நாங்கள் இந்தியாவைப் பற்றி யோசித்தால் இந்தியா கடல் வளங்களைப் பாதுகாப்பதில் முனைப்பாகச் செயற்படுகின்றார்கள், எச்சரிக்கையாக இருக்கின்றார்கள் என்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் பலகோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பிடிபட்டிருக்கிறது. அங்கே 5 இலங்கையர்கள் பிடிபட்டுள்ளார்கள்.
இந்த விடயத்தை நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் அவ்வளவு பெறுமதியான முதலைக் கொண்டு இந்த போதைப்பொருள் கடத்தல் தொழிலைச் செய்வதற்கு இந்த மீனவர்களால் முடியாது. இந்த தொழிலை அரசியல்வாதிகளும், பெரிய பணமுதலைகளும் தான் செய்வார்கள்.
இப்படியான வேலைகள் மீனவர்களால் மேற்கொள்ளப்படுவதில்லை. அத்துடன் பாஸ் நடைமுறையை வகுத்துக் கொடுத்தால் எங்களுடைய வளம் அழிவது மட்டுமல்லாமல் இந்திய மீனவர்கள் தாராளமாக எமது கடற்பரப்பிலே பலதரப்பட்ட கடத்தல் வேலைகளைச் செய்ய முனைவார்கள்.
எனவே அமைச்சர் தான் தெரிவித்த ஆலோசனையை மீள் பரிசோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.