நானாட்டானில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி போராட்டம்
நானாட்டான் டிலாசால் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று(8.6.2026) நானாட்டான் டிலாசால் கல்லூரி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.
குறித்த போராட்டமானது நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஊடகம் தொடர்பான கற்கை ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
போராட்டம்
குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டதில் இருந்து ஊடகம் தொடர்பான கற்றலில் பின்னோக்கி காணப்படுவதாகவும் மாணவர்கள் ஊடக கற்றலுக்கு செல்ல மறுப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் குறித்த ஆசிரியர் பாடசாலை நிர்வாகத்திற்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் ஒத்துழைப்புகள் வழங்குவதில்லை எனவும் நிர்வாகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக குழப்பம் விளைவித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
குறித்த ஆசிரியர் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் அதனால் இந்த அமைதி வழியாக போராட்டத்தில் ஈடுபட்டதாக கலந்து கொண்ட பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக இடமாற்றம்
இந்த நிலையில் அங்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய நிலையில் குறித்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் மனு கையளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மனுவைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு இரு வாரங்களில் தீர்வை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.
தமது போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காது விட்டால் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.




