மட்டக்களப்பில் பெண்களுக்கு நடந்த வன்முறைக்கு நீதிக்கோரி போராட்டம்
மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும், நடந்த அநியாயத்திற்கான நீதியை பெற்று தருமாறும் கோரிக்கை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று(26.03.2026) கொக்கட்டிச்சோலை நகரில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில் மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பட்டம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரும், இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவமும், அத்துடன் தொடர்புபட்டதான கொலை விடயமும் கண்டுபிடிக்கப்பட்டு பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவு
கடந்த மார்ச் 23ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களில் பிரதான சந்தேக நபர்கள் மூவரையும் 04 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கும், மற்றைய இருவருக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை 27ஆம் திகதி குறித்த வழங்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், இத்தகைய கொடூரங்களை நிகழ்த்திய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது எனவும், சந்தேக நபர்களுக்கு உயரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியும், மாவட்டத்தில் இனிமேல் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாவண்ணம் பொலிசார் துரித கதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியும் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, துணைபோகாதே துணைபோகாதே கொலைக்குற்றவாளிகளுக்குத் துணை போகாதே, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், நீதியைநிலைநாட்ட அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம், கை வைக்காதே கை வைக்காதே பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் கை வைக்காதே, வழங்கு வழங்கு விரைவாக நீதியை வழங்கு போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை சந்தியில் இருந்து பிரதேசசபை வரையில் பேரணியாக இடம்பெற்று பிரதேச சபையின் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.
போராட்டக்காரர்களின் கோரிக்கை
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் வழங்கப்படுகின்ற நீதியானது இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதமையை உறுதிப்படுத்தும் விதமாக இருத்தல் வேண்டும் எனவும், இச்சம்பவத்தினால் பொதுமக்கள், முற்சக்கரவண்டி சாரதிகளுக்கிடையிலான அந்நியோன்யம் இல்லாமல் பொய்விட்டதாகவும், மக்கள் சந்தேகத்தேகக் கண்கொண்டு தங்களைப் பார்ப்பதாகவும், இதனால் முற்சக்கர வண்டி சாரதிகள் பெரிதும் பாதிப்பினை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வழங்கப்படுகின்ற தண்டணைகள் மூலம் மேற்சொன்ன சந்தேகங்களை நிவர்த்திக்க வழி செய்ய வேண்டும் எனவும் இதன்போது மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபைத் தவிசாளர், பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், ஆட்டோ சங்கப் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.