சீனாவை தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற சொல்கிறோம் - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் சீனாவை தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற சொல்கிறோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் காணாமல் போன உறவுகளால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 1600 நாளை இன்று எட்டிய நிலையில் அவர்களால் போராட்டம் மேற்கொள்ளப்படும் போராட்ட பந்தலுக்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையிலேயே குறித்த விடயத்தை கூறியுள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும். தமிழர்கள் கடந்த 74 ஆண்டுகளாக அரசியல் தீர்வுகளை கேட்டு வருகின்றனர்.
2009ஆம் ஆண்டு இனப் போரின்போது 146,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள், பொறுப்பு மற்றும் நீதியைக் காண கடந்த 1600வது நாளாக, ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத் தவிர்ப்பு என்று, தொடர்ந்து போராடி வருகிறோம்.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் தமிழர்களுக்கான நீதியை சீனா எதிர்ப்பதால், சீனா தமிழர்களின் நண்பர் அல்ல.
எனவே, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் நாங்கள் சீனாவை தமிழ் தாயகத்தை விட்டு வெளியேறச் சொல்கிறோம்.
எனவே, மனித உரிமைகளிள் அக்கறை கொண்ட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த தாமதிக்காமல் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது தாய்மார் கண்ணீர் மல்க கதறி அழுது தமது பிள்ளைகள் தமக்கு வேண்டும் என கோரியிருந்தனர்.







பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
