தலவாக்கலையில் வர்த்தக நிலையங்களை அடைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
தலவாக்கலை லோகி தோட்ட மல்லிகைபூ சந்தியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வழிப்பிள்ளையார் ஆலயத்தினை தலவாக்கலை கதிரேசன் தேவஸ்தான பரிபாலன சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி இன்று தலவாக்கலை நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்த குறித்த ஆலயத்தில் இருந்த 150 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரம் வெட்டப்பட்டதையடுத்து அதன் கிளைகள் வீதியில் மோட்டார்சைக்கிளில் பயணித்த ஆசிரியர் மீது விழுந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதிகாரிகளை அழைத்து உரிய விசாரணைகளை நடத்தி தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
எனினும் அது குறித்து எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படாத நிலையில் தனி நபர் ஒருவர் மீண்டும் குறித்த ஆலயத்தினை அபகரித்து விடுதி ஒன்றினை அமைக்க முற்படுகிறார்.
இதனால் இப்பிரதேசத்தில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த ஆலயம் அழியக்கூடிய அபாயம் காணப்படுவதுடன், குறித்த ஆலமரத்தின் கிளைகள் தொடர்ந்து முறிந்து விழுவதன் காரணமாக அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், மரணித்த ஆசிரியர் குடும்பத்திற்கு இதுவரை எவ்வித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுமே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மலையக அரசியல் தலைவர்களுக்கு மகஜர் ஒன்றும் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், இதில் மதகுருமார்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
