ஹிஷாலினிக்கு நீதி கோரி லிந்துலை மட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்
டயகம சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து லிந்துலை மட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் இன்று காலை மட்டுக்கலை தேயிலை தொழிற்சாலை அருகிலிருந்து ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி வரை பேரணியாக சென்று தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன், அவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இறுதியில் மரணித்த ஹிஷாலினிக்கு நீதி கிடைக்கவும் ஆத்ம சாந்திக்காகவும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.
அத்துடன், வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், பெண்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.