தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அரச காணி: போராட்டத்தில் இறங்கிய மக்கள்
பொதுத் தேவைக்கு காணிகளை ஒதுக்கிய பின் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றைய தினம் (27.09.2023) பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேவைக்கு அடையாளப்படுத்தப்பட்ட காணி
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பொன்னகர் கிராமத்தின் வேதா குடியிருப்பு பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு காணி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் கூறுகையில், குறித்த காணியானது பொதுச்சந்தை, விளையாட்டு மைதானம் மற்றும் தபாலகம் உள்ளிட்ட பொதுத் தேவைக்காக அடையாளப்படுத்தப்பட்டது.
எனினும் தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக வெளிநாட்டில் இயங்கும் நிறுவனத்திற்கு குறித்த காணி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
எதிர்ப்பு வெளியிடும் மக்கள்
அவ்விடத்தில் சந்தை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட சேவை நிலையங்களை முன்னுரிமைப்படுத்தி காணி வழங்கப்பட வேண்டும். அத்துடன் எமது பிரதேசத்தில் 24 குடும்பங்கள் காணிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் காணிகளை தொண்டு நிறுவனங்கள் ஊடாக வெளிநாட்டவர்களிற்கு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச செயலாளர் பி.ஜெயகரனிடம் வினவிய போது, உயிரிழை எனும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு விண்ணப்பித்ததற்கு அமைவாக குறித்த அரச காணி அவர்களிற்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், கிராம அமைப்புக்களின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.






