நீதிமன்ற சாட்சியங்களை அச்சுறுத்த வேண்டாமென வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஏ9 வீதியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துமாறும், குற்றவாளிகளை பாதுகாக்காது அவர்களுக்கு தண்டனை வழங்கவும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இதேவேளை நீதிமன்ற சாட்சியங்களை அச்சுறுத்த வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்த அதேவேளை, கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
சுமார் 30 நிமிடங்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.