ஆயிரக்கணக்கான மக்களால் மறிக்கப்பட்டது ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி! எரிபொருள் நிலையமும் முற்றுகை
வீதியை மறித்து போராட்டம்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள மல்லிகைப்பூ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று இரவு முதல் மண்ணெண்ணெய் எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் இன்று காலை ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கண்டி உள்ளிட்ட பிரதான வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இரவு பகலாக சிறிய பிள்ளைகளின் கைக்குழந்தைகளையும் வைத்துக் கொண்டு மண்ணெண்ணெய்க்காக காத்திருக்கிறோம்.
நேற்றைய தினம் எங்களுக்கு முன்னுரிமை படிவங்களும் வழங்கப்பட்டன. அதிகாலை வேளையில் விளக்கங்களும் போடப்பட்டன. இப்போது மண்ணெண்ணெய் இல்லை என்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது வேலைவெட்டி இன்றி மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக நாள் கணக்கில் காத்திருக்கிறோம்.
சரியான தீர்வில்லை
ஆனால் இதற்கு சரியான தீர்வினை எவரும் பெற்று கொடுப்பதில்லை. எங்களிடம் ஓட்டு வாங்கிய மலையக தலைவர்கள் இன்று மக்கள் படும் அவலங்களை கண்டுகொள்வதில்லை. ஒன்றுமே செய்ய முடியாவிட்டாலும் கூட மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் நாட்களையாவது அறிவித்தால் மக்கள் இந்த அளவு துன்பப்பட மாட்டார்கள்.
வாக்குகளை பெறும் போது மாத்திரம் உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாங்கள் நாடாளுமன்றம் செல்கிறோம். உங்கள் உரிமைகள் சலுகைகள் அனைத்தையும் நியாயமான முறையில் பெற்றுக்கொடுப்போம் என்று தெரிவிக்கின்றார்கள்.
ஆனால் அவை வெறும் வாய் வார்த்தைகளாக மாத்திரமே உள்ளன. இப்போது மக்கள் படும் துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் அவர்களின் கண்களுக்கு புலப்படவில்லையா? என கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலதிக தகவல் - மலைவாஞ்சன்