மட்டக்களப்பில் சூரிய சக்தி உற்பத்தியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதியில் சோலார் பவர் உற்பத்தியை விரிவுபடுத்தும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதி பொதுமக்களினால் இன்று (29.07.2024) இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே வயல் நிலங்களில் அமைக்கப்பட்ட சூரிய சக்தி உற்பத்தி திட்டத்தினால் பல்வேறு அசௌகரியங்களை தாங்கள் எதிர்கொண்டுவரும் நிலையில், மீண்டும் அதனை விரிவுபடுத்த முன்னெடுக்கும் செயற்பாடுகளினால் தமது சூழல் பாதிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் தமக்கான காணி தேவையினையும் பூர்த்திசெய்ய முடியாத நிலையேற்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேய்ச்சல் தரை
வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு இன்று காலை முன்பாக ஒன்றுகூடிய நாவற்காடு பகுதி பொதுமக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளியிட்டதுடன் குறித்த திட்டத்தினை தடுத்து நிறுத்துமாறு பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.
இதன்போது, பிரதேச செயலகத்திற்குள் போராட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோது, ஐந்து பேர் மட்டும் உள்ளே அழைக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை மனு கையளிக்கப்பட்டதுடன் தமது கோரிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
நாங்கள் வீட்டுக்கு ஒரு மாடு வளர்க்கும் செயற்பாடுகளை எமது கிராமத்தில் முன்னெடுத்துவருகின்றோம். இவ்வாறான சூரிய சக்தி திட்டங்கள் காரணமாக தமது மாடுகளை மேய்ப்பதற்கான மேய்ச்சல் தரைகூட இல்லாமல் செல்லும் நிலையேற்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.
மக்கள் கோரிக்கை
இந்த சூரிய சக்தி திட்டத்தினால் அதிக வெப்பம் உறிஞ்சப்படுவதாகவும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரைகள் இல்லாமல் போவதாகவும் இதனால் கால்நடைகள் அழிந்து போவதாகவும் எதிர்கால சந்ததிகளும் அதே குடியிருப்பில் வாழ்வதற்கு ஆசைப்படுவதாகவும் இந்த சூரிய சக்தி திட்டத்தினை மேலும் மேலும் விஸ்தரிப்பு செய்ய செய்ய தங்களது குடியிருப்பு அழிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாங்கள் வாழும் வெறும் 10 பேர்ச் காணியில் மேலும் காணிகளை வாங்கித்தான்
எங்களது பிள்ளைகளை அங்கு நாங்கள் வாழ வைக்க வேண்டும். எனவே, இந்த சூரிய சக்தி நமக்கு
வேண்டாம் எனவும் பிரதேச செயலாளரிடம் பல தடவைகள் கூறியும் இது தொடர்பாக எந்த
முடிவும் எட்டப்படவில்லை எனவும் தங்களுக்கு சிறந்த ஒரு தீர்வை பெற்றுத்
தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



