தமிழ் மக்களுக்கு சொந்தமான நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்
தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கிளாய் கிராம மக்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம் காலம் -12.02.2022 சனிக்கிழமை நேரம் - காலை 09.30 மணி இடம் -கொக்கிளாய் பாடசாலை முன்பாக இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு,கிழக்கு மாகாணங்களின் இணைப்பு புள்ளியான கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான தமிழ் மக்களுக்கு சொந்தமான பாரம்பரிய நிலங்களை கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் கையகப்படுத்தும் நோக்கோடு நில அளவீடு மேற்கொள்ளப்பட்டு சுவீகரிப்பதற்க்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே சிங்கள குடியேற்றங்களாலும் ,இராணுவ ஆக்கிரமிப்பாலும் மகாவலி எல் வலயத்தாலும் , வன ஜீவராசிகள் திணைக்களம் , வளவள திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் ,போன்ற அரச இயந்திரங்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பால்,இருப்பு கேள்விக்குள்ளாகி வரும் தமிழ் மக்களின் எல்லை கிராமங்களில் மேலதிகமாக கனிய மணல் கூட்டுதாபனத்துக்கு என மிகுதி நிலங்களையும் அபகரிக்கும் வேலையை அரசு மிக திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது.
எனவே தமிழ் மக்களுக்கு சொந்தமான இந்த நிலங்களை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கிளாய் கிராம மக்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே அனைத்து தரப்பினரின் ஆதரவையும் வழங்குமாறு கொக்கிளாய் எல்லை கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை,முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்படட கொக்கிளாய் தொடக்கம் செம்மலை கிழக்கு நாயாறு வரை தமிழ் மக்களின் சுமார் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்வீக நிலங்கள் கனிய மணல் அகழ்வு என்ற பெயரில் அபகரிக்க நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக கொக்கிளாய் முகத்துவாரம் தொடக்கம் கொக்குத்தொடுவாய் வரையான தமிழ் மக்களின் விவசாய செய்கைக்காக பயன்படுத்தும் நிலங்கள் மற்றும் தோட்ட செய்கைக்கான நிலங்கள் குடியிருப்பு நிலங்கள் உள்ளடங்கலாக இவ்வாறு அளவீடு செய்யும் நடவடிக்கையினை நில அளவை திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளதாக கொக்கிளாய் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கொக்கிளாய் கிழக்கு பகுதியில் 16 பேருக்கு சொந்தமான 44 ஏக்கர் பூர்வீக
காணிகளை எந்தவித முன்னறிவித்தலோ இழப்பீடோ வழங்காது கையகப்படுத்தி இல்மனையிட்
அகழ்வை ஆரம்பித்துள்ள கனிய மணல் கூட்டு தாபனம் தற்போது மேலும் காணிகளை
கையகப்படுத்தும் நடவடிக்கையாக இவ்வாறு முன்னறிவித்தல் எதுவுமின்றி தமது
காணிகளை கையகப்படுத்தும் நோக்கோடு நில அளவை செய்து எல்லைப்படுத்தும்
நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.