அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஊடுருவிய குண்டர்கள் - ஆங்கில ஊடகம் தகவல்
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஆளுங்கட்சியின் குண்டர்கள் ஊடுருவியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல கசினோ வர்த்தகர் தம்மிக பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது வீட்டின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இதன்போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல், அவர் ஆளுங்கட்சிக்கு எதிரான போலியான செய்திகளை வெளியிடுவதாக கூறி அவருடன் கடும் வாய்த்தர்க்கம் செய்துள்ளனர்.
போராட்டங்களில் ஊடுருவிய ஆளுங்கட்சியின் குண்டர்கள்
அத்துடன் ஊடகவியலாளரான பெண்ணை தாக்குவதற்கும் குண்டர்கள் முயற்சித்த போது அவர் புத்திசாலித்தனமாக அங்கிருந்து தப்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் இருந்து அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஆளுங்கட்சியின் குண்டர்கள் ஊடுருவி அதன் நோக்கங்களை சிதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை தெளிவாக ஊகிக்க முடிவதாகவும் ஆங்கில ஊடகம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.