விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் அநுரவுக்கு எதிராக போராட்டம்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்தை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மகிந்த ராஜபக்சவிற்கு ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (12.05.2026) அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.
இந்த நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்துச் சில ஆதரவாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதில் “நாட்டை யுத்த காலத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம், இது சிங்களவர்களின் நாடு, ஆட்சி செய்ய முடியாவிட்டால் அரசாங்கமே வெளியேறுங்கள்” போன்ற கருத்துகளைத் தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.