ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க சர்வதேச கடற்படை - ஐரோப்பிய நாடுகள் புதிய திட்டம்
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகப் புதிய சர்வதேச கடற்படை ஒன்றை உருவாக்கும் நோக்கில், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து பாரிஸில் உள்ள எலிசி (Elysee) ஜனாதிபதி மாளிகையில் இன்று விசேட மாநாடு ஒன்றை நடத்தியுள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜெர்மனி ஜனாதிபதி பிரெடெரிக் மெர்ஸ், இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உட்பட சுமார் 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
உலகப் பொருளாதாரத்தை ஈரான் பணயக்கைதியாக
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போரைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"ஹோர்முஸ் நீரிணை கடல்சார் சுதந்திர முன்முயற்சி" (Strait of Hormuz Maritime Freedom of Navigation Initiative) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஈரானுடனான போர் முழுமையாக முடிவுக்கு வந்த பின்னரே நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தப் படை ஒரு "தற்காப்பு நடவடிக்கை" மாத்திரமே என்றும், போரில் ஈடுபடாத நாடுகளைக் கொண்டே இது அமைக்கப்படும் என்றும் மேக்ரான் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தால் ஐரோப்பாவில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தை ஈரான் பணயக்கைதியாக வைத்துள்ளதாகப் பிரதமர் ஸ்டார்மர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தப் படைக்கான இராணுவத் திட்டமிடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய பாதுகாப்புத் தரப்புகள் தெரிவித்துள்ளன.