நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுதல் தொடர்பான விசேட கலந்துரையாடல்
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பினை வெளியிட்டு வரும் நிலையில், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவதற்கான உத்தேச சட்டம் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் (ISTRM) ஏற்பாட்டிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. எல். பீரிஸ் மற்றும் சட்டம் தொடர்பான பேராசிரியை சாவித்ரி குணசேகர ஆகியோரின் தலைமையிலும் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடலின் பிரதான நோக்கம்
இந்த ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, நீண்டகாலமாக கோரி வரும் சர்வதேச பங்களிப்புடன் ஒரு நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு பதிலாக உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை அமைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஆராய்வதே இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கம் என இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செயலகத்தின் பிரிவுகள்
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பதை உறுதிசெய்து பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உட்பட, நிலைமாறுகால நீதியின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய வலுவான கருத்துப்பரிமாறலுக்கு இந்த கலந்துரையாடல் வாய்ப்பளிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைமாறுகால நீதிச் செயன்முறைக்கான நம்பிக்கையையும் சட்டப்பூர்வமான தன்மையையும் கட்டியெழுப்புவதற்காக பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களை சேகரிப்பது மற்றும் வெளிப்படையான ஆலோசனை செயல்முறையை நடத்துவதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டதாக அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் சட்ட விவகாரங்கள், கொள்கை மேம்பாடு, மக்கள் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (ISTRM) ஆகிய 04 பிரிவுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
