தமிழர்களைப் படுகொலை செய்தவர்களுக்கு பதவி உயர்வு! அரசை தோலுரித்துக் காட்டினார் விக்கி
"பாதுகாப்புத் துறைகளில் வேலை செய்பவர்கள் தவறிழைத்தால், அவர்களுக்கான தண்டனையை நடைமுறைப்படுத்துவதே வழமையான நடைமுறையாக இருந்தாலும், இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்தவர்களுக்கு பதவி உயர்வுகளும், பதக்கங்களும், மன்னிப்பும் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றது.
"இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
"இலங்கையின் தற்போதைய அரசு எல்லா மக்களுக்குமான அரசு அல்ல என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகின்றது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தற்போதைய சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"அரசுக்கு வாக்களித்த பௌத்த, சிங்கள மக்களின் விருப்பங்களுக்கு அமைவாகவே செயற்பட முடியும் என்று ஜனாதிபதி மற்றும் அரச உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.
இலங்கையர்களாக நாம் முன்னோக்கிச் செல்லப் போகின்றோமா அல்லது தொடர்ந்தும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக, இனங்களாகப் பிரிந்து, பின்னோக்கிச் செல்லப் போகின்றோமா என்பதை ஆட்சியாளர்களே தீர்மானிக்க வேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டமன்றி, நாட்டின் வழமையான சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்குகள் பதியப்பட்டிருந்தால், அத்தனை பேரும் தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள்.
ஆகவே, தமிழ் அரசியல் கைதிகளை உடனே மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தச் சபையில் கேட்டுக்கொள்கின்றேன்" - என்றார்.