துவிச்சக்கரவண்டிகளை திருடியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பு நகரில் 19 துவிச்சக்கரவண்டிகளை திருடிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உததரவிட்டுள்ளார்.
காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவருக்கே இன்று இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மட்டு. அரசடிபகுதியில் உள்ள தனியார் கம்பனி ஒன்றிற்கு முன்னால் சம்பவதினமான நேற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டியை ஒருவர் திருடும் போது அந்த தனியார் கம்பனி பணியாட்கள் குறித்த திருடனை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணை
இதனையடுத்து பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி பி.கே.ஹொட்டியாராச்சியின் வழிகாட்டலில் சிறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்கடர் எம்.ஜீ.பி.எம்.எம். யேசூலி தலைமையிலான பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டனர்.
தினமும் காத்தான்குடியில் இருந்து பஸ்வண்டியில் பிரயாணித்து மட்டு. நகருக்கு வந்து அங்கு வங்கிகள் தனியார் கம்பனிகள், சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் துவிச்சக்கரவண்டிகளை திருடி,
அதனை காத்தான்குடி பிரதேசத்தில் 17 ஆயிரம் ரூபா தொடக்கம் 25 ஆயிரம் வரைவில் விற்பனை செய்துள்ளதாகவும் சில துவிச்சக்கரவண்டிகளை கழற்றி பாகங்களாக விற்பனை செய்துள்ளதாகவும் போதைவஸ்துக்கு அடிமையான நிலையில் அதற்கு பணத் தேவைக்காக துவிச்சக்கரவண்டிகளை திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதனையடுத்து திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 19 துவிச்சக்கரவண்டிகளை மீட்டுள்ளதுடன் அதில் 15 துவிச்சக்கரவண்டிகளை திருட்டு கொடுத்தவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை இன்று மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும்
25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.



