புர்கா ஆடைக்கான தடை தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே! - சரத் வீரசேகர
முகத்தை முழுமையாக மூடிய புர்கா ஆடைக்கான தடை தேசியப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே தவிர இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், முன்மொழியப்பட்ட புர்கா மற்றும் நிகாப் தடையானது, ராஜபக்ச அரசாங்கத்தால் முன்மொழியப்படவில்லை.
மாறாக முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட முன்னாள் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டதொன்று என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை உத்தேச தடை இன்னும் அமைச்சரவையில் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் முன்மொழியப்பட்ட முகம் மறைக்கும் ஆடைக்கான தடை தொடர்பில் ஒருமித்த கருத்தை எட்டிய பின்னர் அது அமுல் செய்யப்படும் என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.