வர்த்தக நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுப்பு
தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் எதிர்வரும் சித்திரை புதுவருடப் பிறப்பு மற்றும் நோன்பு பெருநாளை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காணப்படும் வர்த்தக நிலையங்கள் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் பரிசோதனை செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வர்த்தக நிலையங்களில் உள்ள பொருட்களின் காலாவதி திகதி மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை என்பன தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், கோவிட் பாதுகாப்பு தொடர்பிலான சுகாதார விதிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இதில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.






