களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகள் விடுத்துள்ள கோரிக்கை
மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள முச்சக்கர வண்டிகள் நிறுத்தும் நிலையங்களில் வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, இதன்காரணமாக இரு தரப்பினருக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை ஆகியோருக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் இதற்கு இதுவரையில் எதுவித தீர்க்கமான தீர்வினையும் பெற்றுத்தர வில்லை என களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை
சாரதிகள் மேலும் தெரிவிக்கையில், களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகளின் பொறுப்புள்ள சங்கம் என்ற ரீதியில் இதற்கு உரிய அதிகாரிகளை நாடி தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எம்மிடத்தில் உள்ளது.
எனவே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் எதிர் வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் இதற்குத் தீர்வைப் பெற்றுத் தரவேண்டும்.
இல்லையேல் எதிர்வரும் 10 ஆம் திகதி நாம் பிரதேச சபையின் முன்னால் அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளும் அமர்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



