கடற்றொழிலாளர்களின் எச்சரிக்கை! பிரதமர், அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிடும் திட்டம்!
மானிய விலையில் எரிபொருள் வழங்கக் கோரி அமைச்சர்கள் மற்றும் பிரதமர் வீடுகளை விரைவில் முற்றுகையிட கடற்றொழிலாளர்கள் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் இந்த போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்
தனக்குச் சொந்தமான மூன்று படகுகள் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள வெதஆராச்சி, கடற்றொழிலாளர் அமைப்புகளைச் சேர்ந்த சிலர் இந்தத் திட்டத்தைத் தமக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
கடற்றொழிலாளர்கள் வீதிகளில் இறங்கினால் அவர்களைத் தடுப்பது மிகவும் கடினம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
டீசல் மூலம் இயங்கும் 63,000 பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் 9,000 ஒற்றை நாள் மீன்பிடி படகுகள், எரிபொருள் விலை உயர்வுக்குப் பிறகு மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன.
அத்துடன் மண்ணெண்ணெய் மூலம் இயக்கப்படும் சிறிய படகுகளும் நேற்று முதல் மீன்பிடித்தலை நிறுத்தியுள்ளன.