மன்னாரிலிருந்து வடமாகாணத்திற்கான போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்
கோவிட் தொற்று காரணமாக நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பயணத்தடை நாளை திங்கட்கிழமை (21) காலை நீக்கப்படுகின்ற நிலையில் வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் உரிய சுகாதார நடைமுறைகளுடன் இடம் பெறும் என மன்னார் மாவட்ட தனியார் போக்கு வரத்துச் சங்கத் தலைவர் ரி.ரமேஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயணத்தடை நாளை திங்கட்கிழமை (21) காலை நீக்கப்படுகின்ற நிலையில் மன்னாரில் இருந்து வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் இடம்பெறும்.
வடமாகாணத்தைத் தவிர ஏனைய மாகாணங்களுக்கு இடையில் சேவைகள் இடம்பெறாது.மக்கள் போக்குவரத்துச் சேவையைப் பெற்றுக்கொள்ளும் போது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.