விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை - சமூக ஆர்வலர்கள் பாராட்டு (photos)
முல்லைத்தீவில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
எதிர்நோக்கும் அறுவடை
முள்ளியவளை லங்கா i.o.c எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அறுவடையை எதிர்கொண்டுள்ள விவசாயிகளுக்கே இவ்வாறு எரிபொருளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - குமுளமுனை கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட பெரியவெளி பகுதியில்120 விவசாயிகளுக்கு சொந்தமான 353.25 ஏக்கர் வயல் இவ்வாரம் முதல் அறுவடையை எதிர்கொள்கின்றனர்.
இந் நிலையில் எரிபொருள் இல்லாது விவசாயிகள் மேலும் பல இடர்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவசாயிகளுக்கு முன்னுரிமை
இதனால் லங்கா ஐ ஓ சி நிரப்பு நிலையத்தில் கையிருப்பில் இருந்த டீசல் குமுளமுனை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் டீசலுக்காக நீண்ட வரிசையில் இரண்டு நாட்களாக காத்திருக்கின்ற போதிலும் அறுவடை மேற்கொள்ள முடியாது விவசாய நிலங்கள் அழிவடையும் நிலையை எதிர்கொண்டுள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டமையை விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் வரவேற்றுள்ளனர்.