பிளவு கண்டுள்ள மகிந்த - கோட்டா அணிகள்! அரசியல் வாழ்வில் கடினமான நாட்களில் மகிந்த
தமது அரசியல் வாழ்க்கையில் கடினமான நாட்களை கடக்கும் மகிந்த ராஜபக்ச இன்று தமது முக்கிய தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றுக்கு தீர்வு காணும் வகையில், ஏற்கனவே அனைத்துக்கட்சிகளின் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான இணக்கத்தை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
இதன் நிமித்தம் அரசியல் கட்சிகள் கோரும் அடிப்படையில் ராஜபக்சர்கள் இல்லாத அமைச்சரவை ஒன்றை அமைக்கும் வகையில் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கேட்டுள்ளார்.
எனினும் மகிந்த அதற்கு இணங்கியுள்ளார் என்றும் இணங்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் மகிந்தவின் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மகிந்தவின் ஆதரவாளர்கள் இன்று அலரிமாளிகையின் முன்னால் மகிந்தவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
இவர்கள், அலரிமாளிகையில் இருந்து பேரணியாக சென்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.