மாடுகள் அறுக்கப்படுவதை தடை செய்யும் தீர்மான விவகாரம்: அவசரப்படும் மகிந்தவும் இரு அமைச்சர்களும்?
இலங்கையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதை முற்றாக தடை செய்ய எடுத்த தீர்மானத்தை துரிதமாக அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்காக சில சட்டங்களில் திருத்தங்களை செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதற்கான அனுமதியை கோரி, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் இரண்டு அமைச்சர்கள் இணைந்து அமைச்சரவைக்கு கூட்டாக பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகிறது.
கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் ஆகியோர் இணைந்து இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர்.
மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை முற்றாக நிறுத்தும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, மாடு அறுப்புச் சட்டம், விலங்கியல் சட்டம், மாநகர சபை கட்டளைச் சட்டம், நகர சபை கட்டளைச் சட்டம், பிரதேச சபை கட்டளைச் சட்டம் உட்பட சில சட்டங்களை திருத்த வேண்டியுள்ளது.
இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை அறுக்கப்படுவதை நிறுத்த கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் சட்டங்கள் திருத்தப்படாத காரணத்தினால், நாட்டில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவது தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.