நாட்டு மக்களிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை
கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் தேசிய அனர்த்தம் என கருதி மக்கள் அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் மக்கள் சரியான முறையில் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிலர் அரசியல் பேதங்களை அடிப்படையாக கொண்டு புள்ளிகளை போட்டுக் கொள்ளும் வகையில் செயற்படுகின்றனரே அன்றி கோவிட் பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்பது அவர்களின் உண்மையான நோக்கமல்ல என்பது தெளிவாகியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்களை ஒதுக்கி வைத்து வட்டு, நாடு மற்றும் மக்களுக்காக கோவிட்டை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தால் அது எவருக்கும் முன்னுதாரணமாக அமையும்.
நாட்டில் இப்படியான பிரச்சினை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அரசியல் இலாபம் பெறும் வகையில் செயற்படுவது பொருத்தமற்றது.
இப்படியான ஆபத்தான சந்தர்ப்பத்தில் கோவிட் பரவலை கட்டுப்படுத்த இரவு, பகல் பாராது அர்ப்பணிப்புடன் செயற்படும் எமது மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள் பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் சேவை அனைவருக்கும் முன்னுதாரணம்.
அதேபோல மக்களும் சுகாதார ஆலோசனைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். இது அரசியல் நோக்கங்களுக்காக செயற்படும் நேரமல்ல எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.