சட்டங்கள் நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி விளக்கம்
சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது அரச தலைவர் என்ற ரீதியிலும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார்.
அண்மையில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
13ஆவது அரசியலமைப்பின் முழுமையான நடைமுறைக்கு மகாநாயக்கர்கள் இருவரும் தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளனர்.
உறுதிப்படுத்தவேண்டியது தமது பொறுப்பு
அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் 13ஆவது அரசியலமைப்பிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னரும் பல வருடங்களாக இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவேண்டியது தமது பொறுப்பு என்றும் அவர் கூறியதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்
13ஆவது சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா தமது வலியுறுத்தலை தொடர்ந்தும் விடுத்து வருகிறது. எனினும் தென்னிலங்கையின் சிங்கள கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இந்தநிலையில், இந்திய பிரதமரின் அழைப்பின்பேரில், விரைவில் எதிர்பார்க்கப்படும்
ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின்போது, இது தொடர்பில் முக்கிய
முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.