புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி இல்லை! நாடாளுமன்றில் அவருக்கு எதிரான வாக்கெடுப்பு!
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இடைக்கால அரசாங்கத்திடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் சில பொறுப்புக்களை ஒப்படைப்பார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.
அதேநேரம் அவர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் எந்த அமைச்சுகளையும் ஏற்க மாட்டார் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய அமைச்சரவை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அதிகபட்சமாக 20 பேருக்கு மட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவைக்கான பொறுப்புக்கள் குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளது.
இதன்படி தேவானந்தா அமைச்சரவைப் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் இடைக்கால அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் செவ்வாய்கிழமை மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது அதனைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வளையம் போடப்பட்டிருக்கும்.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வித இடையூறும் இன்றி நாடாளுமன்றத்தை சென்றடைவதற்கும் வெளியேறுவதற்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மீண்டும் கூடியதும் முதல் அலுவலாக புதிய துணை சபாநாயகரை தெரிவு செய்ய உள்ளது.
பெரும்பாலும் எதிர்கட்சியின் ரோஹினி கவிரட்ன இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்பின்னர், ஜனாதிபதிக்கு எதிரான நாடாளுமன்றத்தின் அதிருப்தியை தெரிவிக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதுடன், பிரேரணை மீதான வாக்கெடுப்பு அன்று மாலையே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.