எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாவின் உரை! இந்தியாவின் நிலைப்பாட்டை பூர்த்திசெய்யும்?(Video)
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆற்றவுள்ள அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையில் அடங்கப்போகும் விடயங்கள் குறித்து பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில், இந்தியாவின் ஆசிர்வாதத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான விடயங்கள் உள்ளடங்கியிருக்கும் என்று கொழும்பின் ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை மற்றும் இந்திய தலைவர்கள் ஏற்றுக்கொண்ட 13வது திருத்தம் இலங்கையின் யாப்பில் உள்ளடங்கியுள்ளது.
இலங்கையின் தமிழ் பேசும் கட்சிகள் குறிப்பாக மலையக மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன உடன்படாதபோதும், ஏனைய கட்சிகள் இந்த 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவின் ஆதரவைக் கோரியுள்ளன.
இந்த ஏற்பாடுகளுக்கு இந்தியாவின் பின்புலம் இருக்கலாம் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கருத்தை வெளியிட்டுள்ளது.
மறுபுறத்தில் பிந்திய நிலையில் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் வகையில் உதவுத்திட்டங்களை இந்தியா அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கைக்கு உதவும் விடயத்தில் தமிழகத்தின் எதிர்ப்புகளை சந்திக்கும் இந்திய பிரதமர் மோடியின் பாரதீய ஜனதா கட்சி, தமிழகத்தில் செல்வாக்கை பெருக்கிக்கொள்ள, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்கவேண்டிய அவசியம் உள்ளது.
எனவே நல்லிணக்க விடயங்களை இலங்கை ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் எதிர்பார்க்கலாம் என்று ஆங்கில செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில், நல்லிணக்க விடயங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
எனினும் நாட்டில் மிக விரைவாக தீர்க்கப்படவேண்டிய எரிபொருள் விநியோகம், மின்சார விநியோகம் போன்ற விடயங்களை தீர்க்கும் வகையில் ஜனாதிபதியின் உரை அமையவேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஆளும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா, தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்காலநாதன்,இந்த விடயம் தொடர்பில் தமது கருத்துக்கைளை எமது செய்திச்சேவையுடன் பகிர்ந்துக்கொண்டார்.
ஜனாதிபதி, எதிர்வரும் 18ம்திகதி ஆற்றுகின்ற உரையில், தாம் சிங்கள மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டதாக கூறிவரும் நிலைப்பாட்டுக்கு அப்பால், சென்ற நாட்டின் தலைவர் என்ற வகையில் தமது நிலைப்பாட்டை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணும் வகையில் தமிழ் தரப்பினரை அழைத்து சந்திக்கும் நிலைப்பாட்டை தாம் எதிர்பார்ப்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
இதனைவிட விவசாயிகளின் இன்னல்களை தீர்க்கக்கூடிய விடயங்களும் அவரின் உரையில் இடம்பெறவேண்டும் என்று அவர் தமது எதிர்பார்ப்பை வெளியிட்டார்.
இந்தநிலையில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில், முஸ்லிம் தரப்பு அரசியல் கட்சிகள் மற்றும் மலையகக் கட்சிகளின் கருத்துக்களை எமது செய்திச்சேவையினால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை.