பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள பணிப்புரை
நாட்டில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லையை தீர்மானிக்கும் கலந்துரையாடலொன்று அண்மையில் இடம்பெற்றிருந்தது.
பாடசாலைகளை மீளத் திறப்பதை அடிப்படையாக கொண்டு இந்த கலந்துரையாடல் அமைந்திருந்ததாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, முன்பள்ளி முதல் தரம் ஆறு வரையிலா அல்லது 12 முதல் 13 வரையான மாணவர்களுக்கா? தடுப்பூசி வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டிருந்து.
இதன்போது,இங்கிலாந்தின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளின்படி, 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு ஏதாவதொரு தாக்கநிலை ஏற்படக்கூடும் என்றும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற உலக நிலைமைகளை கருத்திற்கொண்டு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பல பிரச்சினை உள்ள நிலையில்,இவை அனைத்தையும் முகாமைத்துவம் செய்து, செயற்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை முதலில் திறக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
200க்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரண்டு வாரங்களில் திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு நேற்றுமுன் தினம் அறிவித்திருந்தது.
இதன்போது,நாட்டில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை முதலில் திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.