போராட்டங்களுக்கு அடக்குமுறையே பதில் என்ற செய்தியை புதிய ஜனாதிபதி வழங்கியுள்ளார்:ஐக்கிய மக்கள் சக்தி
மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியதன் மூலம் புதிய ஜனாதிபதி, ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் என்ற செய்தியை நாட்டுக்கு வழங்கி இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்த காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் எதிர்ப்பை முன்வைக்கும் நோக்கில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய ஜனாதிபதி நேற்று பதவிப்பிரமாணம் செய்தார், இன்று அதிகாலை காலிமுகத்திடல் போராட்ட களத்தின் மீது மனிதாபிமானமற்ற தாக்குதலை நடத்தியே தனது பணிகளை ஆரம்பித்தார்.
போராட்டகாரர்கள் இன்று வெளியேறுவதாக அறிவித்திருந்தனர்

போராட்டகாரர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இன்று வெளியேறவுள்ளதாக அறிவித்திருந்தனர். மதியம் இரண்டு மணிக்கு அங்கிருந்து வெளியேறவிருந்தனர்.
அப்படி அறிவித்திருந்த நிலையில் இந்த மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிகாலையில், இராணுவத்தினர் வந்துள்ளனர். இராணுவத்தினரா என அடையாளம் காண முடியாத முகமூடி அணிந்த நபர்கள் இருந்துள்ளனர். இவர்கள் கூலிப்படையினரோ என்று எமக்கு தெரியாது.
இவர்கள் போராட்டகாரர்கள் மீது மனிதாபிமானமற்ற வகையில் தாக்கியுள்ளனர். போராட்டகாரர்களுக்கு மட்டுமல்லாது உள்நாட்டு, வெளிநாட்டு செய்தியாளர்களையும் தாக்கியுள்ளனர்.
பெண்களையும் மோசமாக தாக்கியுள்ளனர். பௌத்த பிக்குமார் உட்பட மதகுருமாரை மோசமாக திட்டியுள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறைந்தபட்சம் அங்கிருந்து செல்லுங்கள் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கலாம் அல்லது கோரிக்கை விடுத்திருக்கலாம். இது நியாயமாக இருந்திருக்கும்.
உள்நாட்டு, வெளிநாட்டு செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்

எனினும் அப்படியான அறிக்கை மற்றும் கோரிக்கையை விடுக்காது, இப்படியான மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியதன் மூலம் ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கும், இளைஞர்களுக்கு செய்தி ஒன்றை வழங்கியுள்ளார்.
இது சாதாரண அரசாங்கம் அல்ல, இந்த அரசாங்கம் பேச்சுரிமை, போராடும் உரிமை, ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமை போன்ற ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்காது, ஆரம்பத்தில் இருந்தே அடக்குமுறையையே பயன்படுத்தும் என்ற செய்தியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்றே நாங்கள் காண்கின்றோம்.
எதிர்க்கட்சி என்ற வகையில் இந்த நிலைமையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு செய்தியாளர்களை தாக்கியமையானது ஊடக சுதந்திரத்தின் மீதும் கை வைப்போம் என்று வழங்கிய செய்தியாகவே நாங்கள் பார்க்கின்றோம் எனவும் நாளின் பண்டார தெரிவித்துள்ளார்.