இந்தியாவின் நிலை குறித்து ஜனாதிபதி கவலை! - பிரதமர் மோடிக்கு கடிதம்
கோவிட் தொற்று அதிகரித்திருப்பதன் காரணமாக இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை இந்தியா மிக விரைவில் முறியடிக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவின் தற்போதைய நிலை தொடர்பில் தனது கவலையையும் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி இந்திப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்றைய தினம் அனுப்பியுள்ள கூட்டொருமைப்பாடு கடித்தில் கூறியுள்ளதாவது,
முன்னொருபோதும் இல்லாத வகையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி நிலையினை வெற்றி கொள்வதில் மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த முயற்சிகள் பாரிய பங்களிப்பினை வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நிபுணர்களின் ஆதரவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா இந்த நெருக்கடியை வினைத்திறன்மிக்கவகையில் வெற்றிகொள்ளும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களின் நலனுக்காக இலங்கையில் உள்ள பௌத்த மத குருமார்கள் ரத்ன சூத்ரா பிராத்தனை ஒன்றினை நடத்துவதற்கு ஏற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாக உணர்வுபூர்வமான செய்தியில் ஜனாதிபதி பிரதமருக்கு கூறியுள்ளார்.
ஜனதிபதியினதும் பௌத்த குருமார்களதும் இந்த இதயபூர்வமான செயற்பாடானது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான புராதன மற்றும் நெருக்கமான உறவின் ஆழத்தினையும் பலத்தையும் பிரதிபலிப்பதாக அமைகின்றது.
கோவிட்-19 நெருக்கடி மிகுந்த இக்காலப்பகுதியில் இலங்கையினால் இந்தியாவுக்காக வெளிக்காண்பிக்கப்படும் கூட்டொருமைப்பாட்டினை இந்திய மக்களும் தலைமைத்துவமும் பாராட்டியுள்ளன.
இதேவேளை திட்டமிட்ட காலப்பகுதிக்கு முன்னதாகவே இலங்கையில் முதலாவது தடுப்பூசி நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பிப்பதற்கு ஏதுவாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கோவிட்-19 தடுப்பூசிகளை பரிசாக வழங்கியமைக்காக இலங்கை மக்கள் சார்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ நன்றியினையும் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பெருநோயினால் மேலெழுந்திருக்கும் பாரிய சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்பட்டுள்ளன.
இவ்விடயத்தில், இரு நாட்டு மக்களினது நலன்கள் மற்றும் சகோதரத்துவ ரீதியானதும் நாகரிக ரீதியிலானதுமான உறவுகள் ஆகியவற்றினை மேலும் வலுவாக்கும் நெருக்கமான நட்புறவினை சார்ந்ததாக இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பானது காணப்படுகின்றது.