பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையிலிருந்து 12 பேர் ராஜினாமா! இந்திய அரசியல் குழப்பம்
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருந்து பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் ராஜினாமா செய்தது பாஜக தலைவர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருந்து சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், தாவர்சந்த் கெலாட், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜவடேகர், சந்தோஷ்குமார் கங்வார், பாபுல் சுப்ரியோ, தோட்ரே சஞ்சய் ஷாம்ரோ, ரத்தன்லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி, திபஶ்ரீ செளத்ரி ஆகிய 12 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
இதேபோல் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் மிகப்பெரிய ஆளுமையாக பாஜகவில் திகழ்ந்தவர். இவரது ராஜினாமாவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி தொடர்பாளர்கள்
ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகிய இருவருமே பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவை சார்பாக கொரோனா பிரச்சினை , பொருளாதார மந்தநிலை மற்றும் வெளிநாட்டு சமூக ஊடகங்களுடனான பகை குறித்து அரசாங்கம் சார்பாக பேசிக்கொண்டிருந்த முக்கியமான தலைவர்கள் ஆவர்.
ட்விட்டர் பிரச்சினை
ரவிசங்கர் பிரசாத் சட்டம் மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் அமைச்சராக இருந்தார், சமீபத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தொடர்பாக ட்விட்டருடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக சிக்கலில் சிக்கினார். ட்விட்டருடன் சுமூகமாக பேசி புதிய சட்டத்தை சம்மதிக்க வைக்காமல் அதை கையாண்ட விதத்தால் சர்வதேச ஊடகங்கள் மோடி அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கின. இதனால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பின்னணி தெரியவில்லை
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதவி விலகியது தான். எந்த சர்ச்சையும் இல்லை. இவர் தான் அரசின் செய்தி தொடர்பாளராக இருந்தார். பல ஆண்டுகளாக ஊடகங்களுக்கு இவர் தரும் செய்தி தான் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவலாக இருந்தது. இவரது ராஜினாமாவின் பின்னணி என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
கோவிட் பிரச்சினை
சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன். கோவிட் நெருக்கடியை அரசாங்கம் தவறாக கையாண்டதாக விமர்சனங்கள் எழுந்தது. இரண்டாவது அலைக்கு முன்பு அதிகாரிகள் எச்சரித்தும் கண்டுகொள்ளவில்லை என்று ஹர்ஷ்வர்தன் மீது புகார் எழுந்தது.
ராகுல் காந்தி முதல் பலரும் பிரதமர் மோடியை சரமாரியாக கேள்விக்குள்ளாக்கினார். மோடி அரசு கோவிட் இரண்டாவது அலை பிரச்சினையால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. . அதனால் ஹர்ஸ் வர்தன் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக கருதப்டுகிறது.
7 பேருக்கு பதவி உயர்வு
இந்நிலையில் இன்று மாலை நடந்த பதவியேற்பு மூலம் முப்பத்தாறு புதிய அமைச்சர்கள் மோடியின் அரசாங்கத்தில் இணைந்துள்ளார்கள், ஏழு பேர் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். நிதி, வெளியுறவு, உள்துறை மற்றும் பாதுகாப்பு ஆகிய பெரிய நான்கில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.