நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
போதிய நிலக்கரி இன்மையால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவையான அளவு நிலக்கரி கிடைக்காவிட்டால் ஜனவரி முதலாம் திகதி முதல் நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன இன்று (20.12.2022) தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி
மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு குறைந்ததாலும், நீர்மின் நிலையங்கள் தொடர்பான பகுதிகளில் மழையின்மையினாலும், அனல் மின்நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையினாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் தேசிய தேவைகளில் கிட்டத்தட்ட பாதியளவு மின்சாரத்தை நுரைச்சோலை அனல் மின்நிலையம் உற்பத்தி செய்வதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
என்றபோதும் ஏற்கனவே கோரப்பட்ட விலைமனுவிற்கு அமைய 14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.
இதுவரை 5 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி கப்பல்கள்
இதற்கு முன்னர் நிலக்கரியை கொண்டுவருவதற்கான விலைமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, வேறு முறைமையின் மூலம் மேலும் மேலும் 12 நிலக்கரி கப்பல்களை நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
3 நிலக்கரி கப்பல்கள் மூலம் 3 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
மேலும் 28 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர தயாராகுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.