நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மின் விநியோக தடை!
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக, சில பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால், இவ்வாறு சில பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகம்
இந்தநிலையில், நேற்று காலை முதல் நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் நேற்று மாலை 5.30 அளவில் சுமார் 6 மணிநேரத்தின் பின்னர் முழுமையாக வழமைக்குத் திரும்பியிருந்தது.
எனினும், சிறிது நேரத்திற்குப் பின்னர் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டது.
பாணந்துறை உப மின் நிலையத்தில் குரங்கொன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், நேற்றைய தினம் உப மின்நிலையத்தில் குரங்குகள் எவையும் மோதவில்லை என பாணந்துறை உப மின் நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மூன்று மின் பிறப்பாக்கிகளும் செயலிழந்ததாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே, கேள்விக்கு ஏற்ப மின்சாரத்தை வழங்க இயலாமையால் மின் விநியோக கட்டமைப்பில் சமநிலையின்மை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, பல பகுதிகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
விசாரணைகள்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களையும் வழமைக்குக் கொண்டு வருவதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஏற்பட்ட திடீர் மின்தடையினால் தொழிற்சாலைகள், முதலீட்டு வலயங்கள் மற்றும் பிற வணிக நிலையங்களின் செயற்பாடுகளும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
மின்சார விநியோகம் தடைப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து சமிக்ஞை அமைப்புகள் செயலிழந்ததால் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதேவேளை, நேற்றைய தினம் பதிவான திடீர் மின் தடை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.