ஹரின் பெர்னாண்டோவுக்கு மேற்கொள்ளப்படவிருந்த சத்திர சிகிச்சை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு நேற்று மேற்கொள்ள தயார்ப்படுத்தப்பட்டிருந்த சத்திர சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக கொண்டு பொலிஸார் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய தயாராகி இருப்பதாகவும் அதற்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியிட்ட தகவல்களே ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய தயாராகி வருவதற்கான காரணம் என கூறப்படுகிறது.
ஹரின் பெர்னாண்டோவுக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மனுஷ நாணயக்காரவும் ஹரின் தகவல்களை உறுதிப்படுத்தி சரியான தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இந்த தகவல்களை நாட்டுக்கு வெளியிட்டமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவர்களுக்கு விசேட பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் இந்த பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
ஹரின் பெர்னாண்டோ, நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக வெளியிட்ட தகவல்களை அடுத்து, குற்றவியல் விசாரணை திணைக்களம் அவரிடம், வாக்குமூலம் பெற தனது தலைமையகத்திற்கு வருமாறு அழைத்திருந்தது.
வாக்குமூலம் வழங்க சென்ற பின்னர், ஹரின் பெர்னாண்டோவை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் குற்றம் சாட்டி வந்தனர்.
எவ்வாறாயினும் ஹரின் பெர்ணான்டோ உடல் நல குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.