லிந்துலை நகர சபையின் தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பு ஒத்திவைப்பு
தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தலைவர் தெரிவிற்கான தேர்தல் மேலும் ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. லிந்துலை நகர சபையின் தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பு மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் இன்று நகர சபையில் நடைபெற்றது.
குறித்த வாக்கெடுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் மூன்று பேர் மாத்திரம் வருகை தந்தமையினால் மீண்டும் தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மாதம் 05 திகதி நடத்துவதற்கு பிற்போடப்பட்டதாகவும் ,பெரும்பான்மையினை நிரூபிப்பதற்காகவே இன்று இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் லெச்சுமணன் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பாக கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருவர் தலைவர் ஆக வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க நாங்கள் விட்டுக்கொடுத்தோம்.அந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையினை காட்ட முடியாது போனதன் காரணமாக நாங்கள் தோல்வியடைந்தோம். அதனால் சுயேட்சையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அசோக சேபால தலைவர் பதவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் முறைக்கேடு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின் உபதலைவராக இருந்த நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். மூன்று மாதத்தின் பின் உள்ளுராட்சி சட்டத்தின் படி மீண்டும் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்நிலையில் தான் இன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது.இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அங்கத்தவருக்கு பெரும்பான்மையிருப்பதாகவும், அதனால் அவர் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதனை தொடர்ந்து, அவருக்கு பெரும்பான்மையிருந்தால் அவரை தெரிவு செய்யட்டும் என நான் இன்று இந்த வாக்கெடுப்புக்கு செல்லவில்லை.
எனக்கு ஆதரவான 09 பேரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததனால் மீண்டும் இந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளது.ஆகவே நான் அடுத்த வாக்கெடுப்பில் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலில் தலவாக்கலை,லிந்துல நகரசபையின் தலைவராவேன்.
ஏனென்றால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது 80 வருட அனுபவம் கொண்ட ஒரு கட்சி அது ஏனைய நகர பிரதேச சபைகளை தன்வசம் வைத்துள்ளது. அதேபோல் லிந்துலை,தலவாக்கலை நகர சபையில் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
கடந்த காலங்களில் பொதுஜன பெரமுனவுக்கு விட்டுக்கொடுத்தன் காரணமாகத் தான். நாங்கள் தோல்வியை தழுவ வேண்டி ஏற்பட்டது. ஆகவே இம்முறை மீண்டும் அந்த பிழையினை செய்யாது நுவரெலியா மாவட்ட அமைச்சர் சி.பி.ரத்நாயக்க அவர்களும் அரசாங்கமும் எங்களுக்கு ஆதரவு வழங்கி ஒத்துழைக்க வேண்டும்.
அதே நேரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இனம்,மதம்,மொழி,பேதங்கள் பாராமல் கடந்த காலங்களிலும் சேவையாற்றியது. தொடர்ந்தும் அது தனது சேவையினை பாகுபாடின்றி முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam
