தங்கம் தோண்டும் நடவடிக்கை ஒத்திவைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுப்பதற்கான அகழ்வு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் அகழ்வு நடவடிக்கை 02-12-2021 ஆரம்பிக்கப்பட்டது.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா (R.Saravanaraja) முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் பொலிஸாரால் 02 திகதி மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுப்பதற்கு முன்னதாக அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் அன்றைய தினம் அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக குறித்த பகுதிக்கு கனரக இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலையில் நேற்றைய தினத்துக்கு (03) ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கமைய நேற்று மாலை மீண்டும் அகழ்வுப்பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆரம்பமாகி இடம்பெற்றன.
இந்நிலையில் குறித்த குழிகளுக்குள் வெள்ளநீர் தேங்கி அதனை அகற்ற முடியாத நிலை உருவானதாலும் கனரக இயந்திரம் நிலத்தினில் புதையுண்டதாலும் அகழ்வுப்பணிகள் பாதியில் இடைநிறுத்தப்பட்டதோடு மீண்டும் குறித்த அகழ்வுப் பணி 06-12-2021 மாலை 2 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை குறித்த பகுதிக்கு பாதுகாப்பு கடமையில் பொலிஸார் அமர்த்ப்பட்டுள்ளனர்.





