முள்ளிவாய்க்கால் நினைவாக ஐந்தாவது நாளாக இடம்பெறும் கஞ்சி வழங்கும் நிகழ்வு (Photos)
"கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்" என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இன்றுடன் ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி,
முள்ளிவாய்க்கால் நினைவாக முச்சக்கரவண்டி உரிமையாளர்களால் கிளிநொச்சி நகர் பகுதியில் கஞ்சி வழங்கப்பட்டது.
கிளிநொச்சி வைத்தியசாலை முச்சக்கரவண்டி தரிப்பிட உரிமையாளர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது.
மேலும், பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் சூசைப்பிள்ளை சிற்றாலயம் முன்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.
திருகோணமலை சிவன் கோவில் ஆலயத்தின் முன்றலில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (16) முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இதனையடுத்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இன்றைய நாள் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு நாள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட வரலாற்றில் இடம் பிடித்த ஒரு நாள் எனவும்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கடைசி யுத்தத்தின்போது தங்குவதற்கு இடமில்லாமல் உண்பதற்கு உணவில்லாமல் தவித்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்றையதினம் திருகோணமலை சிவன் கோவில் வளாகத்தில் உப்புக் கஞ்சி காய்ச்சி அவர்களை நினைவு கூறுகின்றோம் என தெரிவித்தார்.
முல்லைத்தீவு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாவது நாள் இன்று(16) வடக்கு கிழக்க பகுதிகளில் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களின் நினைவாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பகுதியில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காச்சி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
உடையார் கட்டு பொது சந்தை முன்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் கஞ்சிவழங்கும் நிழக்வு நடைபெற்றுள்ளது. இறுதிப்போரின் போது மக்களுக்கு கஞ்சிகாச்சி வழங்கிய தாயார் ஒருவர் இதன்போது கஞ்சி காச்சி மக்களுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு - முள்ளியவளை
இனப்படுகொலை வாரத்தின் மே 12 தொடக்கம் மே 18 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஐந்தாவது நாளில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பொது அமைப்புகழும் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கு செயற்பாடு இன்று (16)முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
[
புதுக்குடியிருப்பு
புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராம மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கையில்! முள்ளிவாய்க்கால் வாரத்தினை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவேந்தல் வாரம் நினைவிற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாவட்டங்கள் தோறும் மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை காச்சி மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றார்கள் அந்தவகையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராம மக்கள் கோம்பாவில் பகுதியில் கஞ்சி காச்சி வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இந்த கஞ்சி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கபடவுள்ளதாக தெரிவித்துள்ளர்கள்.
அம்பாறை
இந்தியாவினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவி பொருட்கள் கிழக்கு மக்களுக்கும் கிடைப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது.
முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பாரிய அல்லல் பட்டனர். மகிந்த மற்றும் கோட்டா அரசு அந்த மக்கள் மீது மோசமான வன்முறையை செய்துகாட்டியது. அந்த வலிகளை இந்த மாதத்தில் நாம் நினைவுகூருகின்றோம்.
இதேவேளை புலிகளின் மீளுருவாக்கம் என்ற போர்வையில் இந்த போராட்டத்தை மழுங்கடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று முன்னரே சொல்லியிருந்தேன்.
தற்போது இந்து பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ள விடயம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது .அத்துடன் இந்தியாவினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவி பொருட்கள் கிழக்கு மக்களுக்கும் கிடைப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றார்.
கல்முனை
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் ஐந்தாம் நாள் அனுஷ்டிப்பினை மேற்கொள்ளும் முகமாக கல்முனை நகரில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஏற்பாட்டில் முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உறவுகள் துன்ப துயரங்கள் ரணங்களோடு சேர்த்து உண்ண உணவின்றி ஒரு வேளை உணவாக கஞ்சியை அருந்தியமையை நினைவு கூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
அத்துடன் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த அனைத்து உறவுகளுக்குமாக ஈகைச் சுடரேற்றப்பட்டு, அகவணக்கமும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.