ஆதிவாசிகளால் இரவில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா
ஆதிவாசிகள் தங்களது பொங்கல் தினத்தினை முன்னிட்டு தைப்பொங்கல் நாள் இரவு வேளையில் அவர்களது வேடுவ தெய்வத்தினை அழைத்து பூசை செய்வது வழக்கம்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் குஞ்சன்கல்குளம் பிரதேசத்தில் வசிக்கும் ஆதிவாசிகள் தைப் பொங்கல் நாள் இரவு வேளையில் அவர்களது வேடுவ தெய்வத்தினை அழைத்துப் பொங்கல் பூசையினை செய்து வழிபட்டுள்ளனர்.
குஞ்சன்கல்குளம் பிரதேசத்தில் உள்ள வாராகி அம்மன் ஆலயம் மற்றும் நாககன்னி அம்மன் ஆலயம் என்பவற்றில் ஆதிவாசிகள் தங்களது வேடுவ தெய்வத்தினை வைத்து வழிபட்டு வரும் நிலையில் பூசைகள் யாவும் இங்கு நடைபெற்றுள்ளது.
இதில் ஆதிவாசிகள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக பூப்பெட்டியில் காட்டு பொன்னாவரைப் பூ வைத்து, துணிகளைக் காணிக்கையாக வேடுவ தெய்வத்திடம் வழங்கி ஆசி பெற்று பூசைகளில் கலந்து கொண்டதைக் காணக்கூடிய இருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட ஆதிவாசிகளின் தலைவர் ந.வேலாயுதம் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
இதன்போது வேடுவ தெய்வத்தினை அழைத்து பூசைகள் இடம்பெறும் போது தெய்வங்கள் ஆண்டவனிடம் சென்று எங்களுக்கு ஆசி வேண்டி வருவதுடன், நாங்கள் பூப்பெட்டியில் காட்டு பொன்னாவரைப் பூ வைத்து வழிபடுவோம்.
அப்போது அந்த பெட்டியில் உள்ள பூவை மணக்கும் போது பூசகரின் உடலில் தெய்வம் வரும்.
அத்தோடு பூசகரின் உடலில் தெய்வம் வந்து எங்கள் ஆதிவாசிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கப்படும்.
பொங்கல் தின நாள் இரவு எங்களுடைய தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றோம்.
மேலும் நாங்கள் பொங்கலுக்குப் பதிலாகக் காட்டு பொன்னாவரைப் பூ வைத்து எங்களது வேடுவ தெய்வத்திற்கு வைத்து வழிபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






