பேரிடரிலும் அரசியல்வாதிகளின் கோர முகம் அம்பலம்! பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள்
உலக நாட்டு மக்களால் அதிகம் ஈர்ப்பு கொண்ட இலங்கை எனும் அழகிய நாடு இன்று பேரனர்த்தம் காரணமாக நிர்மூலமாகி உள்ளது.
இயற்கையின் வனப்புக்களை கொண்ட பல மாவட்டங்கள் அதன் சுயத்தை இழந்துள்ளதுடன், அந்தப் பகுதிகளை சேர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் தமது எதிர்கால அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டு செயற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல தரப்பினரும் சென்று உதவிகளை வழங்கி வருகின்றனர்.
எனினும் அந்தப் பகுதியை சேர்ந்த அரசியல்வாதிகள் அதற்கு முட்டுக்கட்டையாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், பசியுடன் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பல பகுதிகளில் அரசியல்வாதிகளுக்கும் உதவி செய்ய சென்று குழுவினருக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள்
இதேவேளை, அரசியல்வாதிகள் தமது அரசியல் லாபங்களை தேடி வரும் நிலையில், நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் மக்களுடன் மக்களாக களத்தில் இறங்கி செயற்பட்டு வருகின்றனர்.

பெருமளவானர்கள் நிவாரணப்பொருட்களை சேகரித்து உரிய தரப்பினர் ஊடாக மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மற்றுமொரு சுற்றுலா குழுவினர் வீதிகளில் இறங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
நாட்டை சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் மனிதாபிமான செயற்பட்டு வரும் நிலையில், மக்களின் வாக்குகளை பெற்று அரசியல் செய்யும் இந்த அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் குறித்து மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதேவேளை, சில பகுதிகளுக்கு அனுதாபம் தேடும் வகையில், வீடியோ குழுவினருடன் சென்ற பல அரசியல்வாதிகள் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.