தடுப்பூசி மருந்தளவை நிர்ணயிக்கும் அரசியல்வாதிகள்! - ராஜித குற்றச்சாட்டு
இலங்கையில் தடுப்பூசி மருந்தளவை (Dose) அரசியல்வாதிகள் நிர்ணயிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நோயாளிகளே தங்களுக்குத் தேவையான மருந்துகள் பற்றி தீர்மானிக்கக்கூடிய நாடாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவு தேவையில்லை என நோயாளிகளிடம் கையொப்பங்களை பெற்றுக்கொண்டது நீதியானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோயாளிக்கான தடுப்பூசி மருந்தளவை நோயாளிகள் தீர்மானிக்க முடியாது அதனை மருத்துவர்களே தீர்மானிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையில் அரசியல்வாதிகளே நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தடுப்பூசி மருந்தளவினை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் மருத்தவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நோயாளிகள் தங்களுக்கு ஏற்ற வகையில் எடுத்துக்கொள்ளக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவிடமிருந்து தடுப்பூசி பெற்றுக் கொண்ட போது ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது, பங்களாதேஷை விடவும் இலங்கை கூடுதல் தொகைக்கு தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது,
அதனை நேரடியாக பங்களாதேஷ் வெளிப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் மருத்துவர்களாக மாறுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.