மரண சான்றிதழ் வழங்குவதாக கூறிய ஜனாதிபதி நீதியை பெற்றுத்தர வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்
மரண சான்றிதழ் வழங்குவதாகத் தெரிவித்த ஜனாதிபதி அந்த கொலையைச் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கி காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(Selvam adaikalanathan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி, ஐ.நா சபை செயலாளர் நாயகத்தைச் சந்திக்கின்றபோது காணாமல்போனவர்களுக்கு மரண சான்றிதழ் கொடுக்கப்போவதாகச் சொல்லியிருந்தார்.
சர்வதேச மனிதாபிமான அடிப்படையிலே போர்க் காலங்களில் சரணடைந்தவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் வாக்குமூலத்தை மரணச்சான்றிதழ் கொடுப்பதாகச் சொல்லியிருக்கின்றார்.
ஆனால் இந்த மரண சான்றிதழ் கொடுக்கப்படுவது கொலை செய்யப்பட்டவராக அல்லது மரணமடைந்தவராக இருக்கலாம். அவ்வாறானவர்களுக்குத் தான் கொடுப்பது வழக்கம்.
கண்முன்னாலே ஒப்படைக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையிலே தான் இந்த மரணச் சான்றிதழ் கொடுக்கப்படுகின்றது என்றே நாங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.
அந்தவகையில் நீதித்துறை கொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பதிலே நாங்கள் இந்த கருத்தை முன்வைக்கின்றோம்.
காரணம் படுகொலை செய்யப்பட்டு அதற்கான மரண சான்றிதழ் கொடுப்பதாகச் சொல்லும் ஜனாதிபதி படுகொலை செய்தவர்களைக் கண்டுபிடித்து நீதிமன்றத்திலே நிறுத்தி நீதியை வழங்குகின்ற வாய்ப்பை உண்டுபண்ண வேண்டும் என தெரிவித்துள்ளார்.