பெருந்தோட்ட துறையின் பலம் வாய்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பு விரைவில் உருவாகிறது - மனோ கணேசன்
தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட துறையில் தொழிற்சங்க கூட்டமைப்பை நாம் உருவாக்குகிறோம். தமிழ் முற்போக்கு கூட்டணி தொழிற்சங்கங்களும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் இணைந்து இந்த கூட்டுச் செயற்பாட்டில் இறங்கும்.
இதன்பிறகு இதுவே பெருந்தோட்ட துறையில் மிகப்பெரும் தொழிற்சங்க அமைப்பாக இருக்கும். பெருந்தோட்ட நிறுவனங்களும், அரசாங்கமும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க வாழ்வாதார விவகாரங்கள் தொடர்பில் முதலில் எங்களுடனேயே உரையாட வேண்டும் எனத் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
எம்.பி இராதாகிருஷ்ணன், சுரேஷ் வடிவேல், வேலுகுமார், சுஜித் சஞ்சய் பெரேரா, உதயகுமார் ஆகியோரும், முன்னாள் தொழி ஆணையாளர் நவரத்ன ஆகியோர் கலந்துகொண்ட, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மனோ கணேசன் எம்பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
மீனவர்கள் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள். ஆசிரியர் அதிபர் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள்.
விவசாயிகள், கமக்காரர்கள் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள். நாங்கள் இன்னமும் தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட தொழிலாளர்களைத் தெருவுக்கு இறக்கவில்லை.
அப்படி இறங்கிப் போராடும் பாஷைதான் அரசாங்கத்துக்குப் புரியும் என்றால் அந்த பாஷையில் போராட நாம் தயார். நாட்டின் நிலைமையையும், தொழிலாளர்களின் நிலைமையையும் மனதில் கொண்டு நாம் அரசாங்கத்துக்கு அவகாசம் வழங்குகிறோம்.
நாமே நேரடியாகக் கட்சி அங்கத்தவர்களுடன்தான் இப்போது போராடுகிறோம். விரைவில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள். இதை எங்கள் பலவீனமாக நினைக்க வேண்டாம்.
நியாயமான தீர்வு வராவிட்டால், தொழிலாளர்களைத் தெருவுக்கு இறக்கும் நிலைமை உருவாகும். நாட்டின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்து விட்டது. சம்பளம் ஆயிரம் என்று எழுத்தில் எழுதிக் கொடுத்து விட்டார்கள்.
ஆனால், எத்தனை நாள் வேலை எனத் தீர்மானிக்கப்படவில்லை. வர்த்தமானியில் “கால அடிப்படை சம்பளம்” எனக் கூறப்பட்டுள்ளது. அது என்ன “கால அடிப்படை” என்பதைத் தேடிப்பாருங்கள்.
நேற்று முதல் நாள் நாடாளுமன்றத்தில் தொழில் அமைச்சர் கொண்டு வந்த குறைந்தபட்ச சம்பளம் என்ற சட்ட மூலத்தில், மாதத்திற்கு 25 நாள் வேலை என்ற கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதுதான் கால அடிப்படை. அப்படியானால், ஒருநாளைக்கு ஆயிரம் ரூபாய் என்றாலும், மாதம் 25 நாள் வேலை என்றாலும், அது நான் படித்த கணக்கின்படி ஒரு மாதத்திற்கு 25,000 ரூபா ஆகும்.
அரசாங்கத்தின் கணக்கு எப்படியோ தெரியவில்லை. தோட்டத்தொழிலாளரைத் தோட்ட நிறுவனங்களுடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு, அரசாங்கம் கைகளைக் கழுவிக்கொள்ள முடியாது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கிடைப்பது இல்லை என தனக்கு இதுவரை புகார் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா கூறுகிறார். இது ஆச்சரியம்தான்.
இப்போது நாம் நாட்டுக்கே கேட்கும் வண்ணம் கூறுகிறோம். அமைச்சர் அவர்களே, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் முறையாகக் கிடைப்பது இல்லை. அது “நிறை” மற்றும் “எத்தனை நாள் வேலை” என்பவற்றால் தடையாகிறது எனத் தெரிவித்துள்ளார்.