ஹிஷாலியின் விவகாரத்தை வைத்து தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சி - இம்ரான்
சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். இவ்விடயத்தில் அரசியல் நோக்குடன் செயற்படுவது முற்றிலும் தவறாகும். இப்பிரச்சினையை இனப்பிரச்சினை என இரு சமூகமும் கருத வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சிறுமி ஹிஷாலினியின் மரண விவகாரம் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் இவ்விடயத்திற்கு நீதி வேண்டும் என்று வீதிக்கிறங்குவது அநாவசியமானது.
முறையான விசாரணைகள் இடம் பெறுமாயின் போராட வேண்டிய தேவை கிடையாது.
ஆகவே சிறுமியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளின் பிரகாரம் குற்றவாளி என நீதிமன்றினால் நிரூபிக்கப்படுபவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.