அமைச்சர் பதவிகளுக்கு அவதியுறும் நிலையை பார்க்கும் போது அசிங்கமாகவுள்ளது - முஸம்மில் மொஹிதீன்
மறுக்கடிக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமைகளும் அதற்குத் துணைபோன முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளுக்கு அவதியுறும் நிலையைப் பார்க்கும் போது அசிங்கமாகவுள்ளதாகத் தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்துள்ளார்.
அரசின் செயற்பாடுகள் தொடர்பாக இன்று(10) வினவிய போதே ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களை இனவாதிகள், மதவாதிகள் எனச் சித்தரித்து ஈஸ்டர் தாக்குதலைச் சூத்திரமாக வைத்து அமைத்த இந்த அரசு முற்றாகவே பௌத்த சிங்கள பெரும்பான்மையினரிடம் முஸ்லிம்களை ஒரு மதவாதிகள், இனவாதிகள் நம்நாட்டை முஸ்லிம் நாடாக மாற்றும் அபாயம் உருவாகும், தமிழர்கள் ஈழம் கேட்டார்கள், முஸ்லிம்கள் இலங்கையே பிடிப்பார்கள் என்ற இன வெறி கொள்கையைச் சிங்கள மக்கள் மத்தியில் பிழிந்து ஊற்றி உருவெடுத்த அரசிடம் தஞ்சம் புகும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கடந்த தேர்தல் காலங்களை முற்றாக மறந்து செயல்படுகின்றனர்.
தொடர்ச்சியாகக் களைந்துவரும் முஸ்லிம்களின் பாரம்பரிய மத உரிமைகள், இஸ்லாமியக் கலாச்சாரங்கள், தனியார் சட்டங்களையெல்லாம் களைந்தெறிந்து வரும் இந்த அபாண்ட அரசாங்கத்தின் கோடாரி காம்புகளாக இருக்க விரும்பும் அரசியல் தலைவர்களாகிய நீங்கள் இந்த அரசை எப்படி விமர்சித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றீர்கள் என்பதை நீங்கள் மறந்தாலும் சமூகம் ஒருபோதும் மறக்காது என்பதை இங்கு நான் ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
அபிவிருத்தி அபிவிருத்தி என்று மக்களைப் படையர்களாக ஏமாற்றும் நீங்கள், வடக்கு, கிழக்கில் அரசை எதிர்த்து நின்று போராடி உரிமைகளைப் பெற்றிருக்கும் தமிழ் அரசியலைக் கொஞ்சமாவது உங்களால் அவதானிக்க முடியவில்லையா?
உங்கள் முஸ்லிம் பிரதேசங்கள் போலவே அவர்களின் பிரதேசங்களும் அபிவிருத்தி அடைந்து வருகிறது. அவர்கள் அமைச்சர் கேட்டார்களா அதிகாரம் கேட்டார்களா இல்லை தெளிவாக நின்று தம் சமூகத்திற்காக ஜனநாயக போராட்டம் செய்து பெற்றுக் கொள்கின்றனர்.
இது போன்று உங்களால் முடியாத நிலைக்கு முக்கிய காரணம் உங்கள் சுயநல அரசியலே என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.