கடல் அட்டை விவகாரம்! நோக்கம் தவறெனில் நிச்சயமாக எதிர்ப்போம் -கஜேந்திரகுமார்
வடக்கில் இடம்பெறும் கடல் அட்டை விவகாரம் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நோக்கத்துடன், பூகோள அரசியல் நோக்கங்களோடு எடுக்கின்ற அரசியல் நடவடிக்கையாக நாங்கள் கருதினால் நிச்சயமாக எதிர்ப்போம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதியில் கோவிட்டினால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள் சிலருக்கான உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கைவேலி பகுதியில் இன்று(03) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் அனர்த்தத்தினால் தமிழ் மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் கடந்த ஒரு கிழமையாக வடக்கில் கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை உற்பத்தி என்ற பெயரில் நடைபெறுகின்ற சீன நாட்டின் நபர்கள் இங்கு நிறுவனத்தினை உருவாக்கி நடத்துகின்ற வேலைகள் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்துள்ளது.
பொருளாதாரம் முழுமையாக சுருங்கிப்போயுள்ள நிலையில் போரால் 32 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவிட் அடிக்குமேல் அடியாகத் தலையில் சுமத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய கொடூரமான சுமையாக உள்ள இடத்தில் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தினையும் தேடிக்கொண்டிருக்கின்ற நிலைதான் இன்றும் தொடர்கின்றது.
இந்த பின்னணியில் தான் தங்களுக்கு எந்த விதமான வருமானமும் தொழிலும் இல்லாத இடத்தில் மக்களின் கடல் வளத்தில் தொழில் செய்து மக்களுக்கான வருமானத்தினை பறிக்கும் நடவடிக்கையினை கடுமையாக எதிர்த்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் மக்கள் தெரிவித்து இதன் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தச் சொல்லிக் கேட்டுள்ளார்கள்.
நேற்று காலையில் அரியலைக் கடற்பரப்பிற்குச் சென்ற வேளை அங்கு ஒரு சீன நிறுவனம் நான்கு சீன பிரஜைகளின் முழு பங்களிப்புடன் ஒரு கடல் அட்டைக்கான உற்பத்தி நிறுவனம் ஒன்றினை உருவாக்கி குஞ்சுகளைப் பொரிக்க வைத்து நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் முகாமையாளராக இருப்பது ஈ.பி.டி.பி என்ற ஆயுத துணைக்குழுவின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கணேஷ் என்பவர் தான் இருக்கின்றார்கள். இது ஆறு ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருந்தும் எந்தவிதமான வருமானத்தினையும் அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு வழங்கியதில்லை அந்த நிறுவனம் என்ன செய்கிறது என்ற கேள்வி எங்களுக்கு எழுகின்றது.
இந்த விடயத்தினை நாங்கள் அவர்களிடம் கேட்டபோது,அவர்கள் தெரிவித்தது அந்த கடல் அட்டை குஞ்சுகளை தாங்கள் பிரித்துக் கொடுப்பதில் தான் வேலை வாய்ப்பு என்பது மறைமுகமாக 2500 குடும்பங்களுக்கு தாங்கள் செய்து கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
இது எங்களுக்கு அதிசயமாக இருந்தது. உண்மைத் தன்மையினை நாங்கள் தேடவுள்ளோம் உண்மையில் வேலைவாய்ப்பிற்குரிய விடையமாக இருந்தால் பூகோள அரசியல் கோணங்கள் இல்லாமல் இருந்தால் நாங்கள் எதிர்க்கமாட்டோம் அப்படி இல்லாமல் இது வெறும் முகக்கவசமாக இருந்து அதற்குப் பின்னால் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நோக்கத்துடன் பூகோள அரசியல் நோக்கங்களோடு எடுக்கின்ற அரசியல் நடவடிக்கையாக நாங்கள் கருதினால் நிச்சயமாக எதிர்ப்போம்.
அரசாங்கம் கோவிட் தடுப்பிற்காக அதிகளவில் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். இவ்வளவு பெரிய தொகையில் 5 வீதம் கூட செலவு செய்திருக்கமாட்டார்கள். வடக்கு, கிழக்கில் தடுப்பூசி நடவடிக்கை மிகவும் தாமதம் அடைந்த நிலையில் தான் இருக்கின்றது.
போரால் அழிக்கப்பட்ட மக்கள் இன்று கோவிட்டினால் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு இன்னொரு அழிப்பிற்கு அரசு தள்ளுகின்றார்கள் என்ற சந்தேகத்தில் உள்ளோம்.
வெளிநாடுகளிலிருந்து இலங்கை அரசிற்கு நிதி உதவிகளை வழங்குகின்றவர்கள் வழங்குகின்ற நிதி சிங்களம் இல்லாத மக்களுக்குச் சென்றடைகின்றதாக என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.


