ஒட்டுமொத்த நாட்டையே சீனர்களுக்கு கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது - கோவிந்தன் கருணாகரம்
இலங்கையானது சீனாவின் மாகாணம் போன்று செயற்படுவது மேற்குலக நாடுகளுக்கோ இந்தியாவுக்கோ விரும்பத்தகாத செயலாக உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் சீனர்களின் ஆதிக்கத்திற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கின்றது என்றால் நேரடியாக அது இந்தியாவின் பாதுகாப்பினை பாதிக்கும் வகையில் நேரடியாக இந்தியாவின் பகையினை சம்பாதிக்கக்கூடிய நிலையினையே இந்த அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
கோவிட் காரணமாக இந்த நாட்டின் நிலைமை மிக மோசமாக சென்று கொண்டிருக்கின்றது. தொற்று நோய்க்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஒரு அறிக்கை விடுகின்றார்.கோவிட் செயலணிக்கான பொறுப்பான இராணுவத்தளபதி சவேந்திர சில்வா வேறுவிதமான அறிக்கை விடுகின்றார்.சுகாதார அமைச்சர் இன்னுமொரு அறிக்கை விடுகின்றார். நாட்டு மக்கள் தற்போதைய நிலையில் குழப்பமான நிலையிலிருந்து கொண்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளேயின் அறிக்கையின்படி அல்பா, டெல்டா சில வாரங்களில் பரவி ஆயிரக்கணக்கானோர் இறக்கும் நிலையேற்படும் என்று கூறுகின்றார்.
முதலாம், இரண்டாம் அலையினை ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தி கோவிட் தொற்றினை ஓரளவு கட்டுப்படுத்தினார்கள். மூன்றாவது அலையில் பயணக்கட்டுப்பாடு என்று கூறி ஒரு நகைச்சுவையான நாடகம் நடைபெற்று வருகின்றது.
ஆடைத்தொழிற்சாலைகள் கிராமப் புற பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மூன்றாவது அலையில் கோவிட்டினை கொண்டுசென்ற பெருமை இந்த ஆடைத்தொழிற்சாலைகளுக்குத் தான் கிடைத்துள்ளது.
கோவிட் தொற்றினால் வாகரை பிரதேசம் பாதிக்கப்படாமலிருந்தது. ஆனால் கடந்த பத்து தினங்களாக அதிகமானோருக்கு கோவிட் தொற்று உறுதப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்திலிருந்து தம்பலகாமம், கந்தளாய் பகுதிகளில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு சென்று வருபவர்களினால்தான் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் இந்த கோவிட் தொற்றினை ஒழிப்பதற்குத் தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை துரிதப்படுத்தி கோவிட் தொற்றினை ஒழிக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் சில இலங்கையினை தங்களது சிவப்பு வலயங்களுக்குள் உட்படுத்தியுள்ளார்கள்.
உயர்கல்விக்கு செல்பவர்களும், தொழில் வாய்ப்புகளைத் தேடுபவர்களும், விடுமுறையில் வந்தவர்களும் மீண்டும் செல்லமுடியாத நிலையில் உள்ளனர். அண்மையில் பொசன் விடுமுறையினை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டிருந்தனர். அதில் 16 தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்புக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றன. இலங்கைக்கு பலவிதமான அழுத்தங்கள் மேற்கு நாடுகளிலிருந்து வந்துகொண்டிருக்கின்றது.
இலங்கை அரசாங்கம் சீனாவினை முற்று முழுதாக நம்பி சீனாவின் வழித்தடத்தில் சீனாவின் ஒரு மாகாணம் போன்று செயற்படுவது மேற்குலக நாடுகளுக்கோ இந்தியாவுக்கோ விரும்பத்தகாத செயலாக இருக்கின்றது.
அந்த வகையில் அமெரிக்கா காங்கிரசானது, இலங்கைக்கு எதிரான, தமிழ் மக்களுக்குச் சாதமாக, வடகிழக்கு பிரதேசம் தமிழர் தாயகமாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற பிரேரணையொன்று முன்மொழிந்துள்ளது.
அதற்கு மேலாக விசேடமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கையிலிருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும், என்ற ஒரு பிரேரணை 628 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியிருக்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவில்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீள்பரிசீலனை செய்யவேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் காரணமாகப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீள்பரிசீலனை செய்யவேண்டும்.
இந்த நிலையில்,தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஒரு அறிக்கையினை விட்டிருந்தார். கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே சந்திப்பொன்றுக்கு ஏற்பாடாகியிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டிருந்தது.
கடந்த 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜபக்ச, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகப் பேசிய இரண்டு தினங்களில் 16அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இரண்டு தினங்களில் இந்த அரசியல் கைதிகள் விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பு ஏற்பாட்டுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடைபெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டது என்று கூறப்படும் என்ற காரணத்தினால் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டு விடுதலை செய்யப்பட்டது.
இந்த நாட்டினை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாடே இந்த நாட்டிற்குள் சீனர்கள் வருகையும், அதனையொட்டி நாட்டின் பல பாகங்களிலும் அவர்களின் வேலைத்திட்டங்களும் அமைந்துள்ளது.
கிறிஸ்துவுக்கு முன்பாக கட்டப்பட்ட திஸ்ஸ வாவியில் தூர்வாரல் வேலைத்திட்டத்தில் சீனர்கள் பங்குபற்றியுள்ளனர்.அங்கு சீன இராணுவத்தின் சீருடையினையொத்த சீருடையைச் சீனர்கள் அணிந்திருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரெட்ன அவ்வாறான சீருடைகளை இனிமேல் அணியக்கூடாது எனக் கூறியுள்ளார்.
சிலவேளைகளில் அந்த சீருடையினை அணிந்தவர்கள் சீன இராணுவத்தினராகக்கூட இருக்கலாம். இந்த நிலையில் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த இந்த நாட்டின் மூத்த குடிகளான தமிழ் குடிகள் வடகிழக்கில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், யாழ் மாநகரசபையின் முதல்வர் மணிவண்ணன் மாநகரசபையின் எல்லைக்குள் வாகன தரிப்பிட காவல்களுக்காக விடுதலைப்புலிகளின் சீருடையினையொத்த சீருடையினை அறிமுகப்படுத்தினார் என்று கூறி மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டதுடன், அந்த சீருடையினை அணிந்தவர்கள் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குப்படுத்தப்பட்டனர்.
இராணுவச் சீருடையினை அணிந்த சீனருக்கோ, அவர்களை அழைத்துவந்த நிறுவன பிரதிநிதிகளுக்கோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தவித கேள்வியுமில்லாமல் சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றது.
இந்த நாட்டில் சீனர்களுக்கு இந்த அரசாங்கம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது என்பதற்கு மேலாக தெற்கில் அம்பாந்தோட்டையில் தொடங்கி திஸ்ஸமகாராம,கொழும்பு போட்சிற்றி என்ற பெயரில் துறைமுக நகரத்தினை முற்று முழுதாக அவர்களுக்குக் கொடுத்து கொழும்பு நகரில் உள்ள தொன்மை வாய்ந்த கட்டிடங்கள்,யாழ்ப்பாணத்தின் கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையுடன் வடகிழக்கில் வாழ்வாதாரத்தினை நம்பியுள்ளவர்களின் அடிக்கம் செயலைக்கூட இன்று சீனர்கள் செய்கின்றனர்.
இன்று ஒட்டுமொத்த நாட்டையே சீனர்களுக்குக் கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இது இந்த நாட்டினை அழிவுப்பாதைக்குக் கொண்டுசெல்லும். வடகிழக்கில் சீனர்களின் ஆதிக்கத்திற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கின்றது என்றால் நேரடியாக அது இந்தியாவின் பாதுகாப்பினை பாதிக்கும் என்னும் வகையில் நேரடியாக இந்தியாவின் பகையினை சம்பாதிக்கக்கூடிய நிலையினையே இந்த அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என தெரிவித்துள்ளார்.